title


நீ ஒரு காதல் சங்கீதம் – 1


நீ ஒரு காதல் சங்கீதம்… உன்னைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்தவுடன், எனக்குத் தோன்றிய தலைப்பு இது.

நம்முடைய எல்லா சந்திப்புக்கும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாட்டை முணுமுணுத்தபடியேதான் நீ வந்திருக்கிறாய். மட்டுமல்ல, நம்முடைய ரசனை வேறெந்த விசயங்களையும் விட ராஜாவின் பாட்டில்தான் ஒரே மாதிரியானது.

உனக்கு நினைவிருக்கிறதா..? சென்னை திருவான்மியூர் கடற்கரையில், ஒரு மெல்லிய மழைத்தூறலில் என் காதருகே நீ பாடிய “அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…”, மழைத்தூறல்கள் நம்மை நனைக்க உன் மெல்லிய எச்சில் தெறிப்புகள் என் காதை நனைக்க ஒரு சேர இருவரும் சிலிர்த்த கணம். உனக்கு மறந்திருக்காது. இதோ இன்றும் கூட எப்போது மழை வந்தாலும் உடனே சாரல்களுடன் சேர்ந்து உன் பாடலும் என்னை நனைக்கிறது.

இந்த FM வந்தபிறகுதான் உன் முகத்தில் அடிக்கடி நான் குழந்தையை பார்த்தது. எப்போதுமே என் இடது காதில் ஒன்றும் உன் வலது காதில் ஒன்றுமாக ஒரே “hearphone”னில் தான் நாம் பாட்டு கேட்பது. ஒரு முறை கூட நீ இடம் மாறி அமர்ந்ததில்லை. கேட்டால் “அர்த்தனாரீஸ்வரனில் இடப்பக்கம்தான் அம்மைக்கு” என்பாய். ஒரு அரை மணி நேரம் பாட்டு கேட்டால் அதில் எப்படியும் நான்கு பாடல்களாவது இளையராஜா பாடல்களாக இருக்கும். அத்தருணங்களிலெல்லாம் லேசாக கிள்ளி “நம்மாளு” என்றவாறே கண்ணடிப்பாய்.

உன்னைப் பற்றி எழுதுவதற்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பு.. எனக்குத் தெரிந்து இல்லை.

நீ ஒரு காதல் சங்கீதம். ஆம் நீ ஒரு காதல் சங்கீதம்.

No comments: