title


நீ ஒரு காதல் சங்கீதம்-2


பொதுவாக நீ பேசினாலே பாடுவது போலதான் இருக்கும். அதனால்தான் நான் உன்னை பாடச்சொன்னதே இல்லை. இருந்தாலும் என் மனதறிந்து (அதிலொன்றும் வியப்பில்லை) நீயாக பாடுவாய். என்னை, என்னை விட நன்கறிந்தவள் நீ.

 
இதைச் சொல்லாத காதலன் எவனாவது இருப்பானா?

*

“ஏதாவது பாடுடா Please”; நீ எப்போதும் கேட்பவளல்ல… அழைக்கும் முன்னரே மழலை வருவது போலவோ, கண்ணெதிரே விழும் முதல்துளி மழையாவது போலவோ அதிசய நிகழ்வுதான். என்பதால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்லிய பரபரப்படைவேன் நான். அன்றும் அதே பரபரப்புடன் பாடத்துவங்கினேன்….

வீணையடி நீயெனக்கு!
மேவும் விரல் நானுனக்கு!
பூணும்வடம் நீயெனக்கு!
புதுவயிரம் நானுனக்கு!

தேர்ந்த இசைஞானம் கொண்டவன் போன்ற பாவத்துடன் நான் பாட, நீ பாவமாய் கேட்டிருந்தாய்.

பாடல் முடிந்ததும் புருவமுயர்த்தி “எப்படி ?” என்றேன்.

“என்னதான் சொல்லு நீ படிக்கிற அளவுக்கு நல்லா பாடமாட்டேங்கிற…”

“தெரியுதுள்ள.. பின்ன எதுக்கு பாட சொல்லுற” எனக் கோவமாய் கேட்டவனிடம்…

“டேய் லூசு… குழந்தை தத்தக்கா பித்தக்கா-ன்னு பேசுறத ரசிச்சு கேட்குறது பேசறது புரியுதுங்கறதால இல்ல….. புரியுதா ?” என்றாய்.

புரிந்தது.

பேரன்பு வழியும் உன்காதல் என்னைக் கொல்(ள் )லா(ளா )மல் விடாது.

No comments: